வெளிநாட்டுக்காரன் வாழ்க்கை . . .


யாரைத்தான் விட்டது இந்த இக்கரைப்பச்சை . .
இந்த நாட்டுக்கு வந்தவனுக்கோ 
அக்கரை பச்சை . . . !

மறக்காமல் மேற்கொள்ளும் 
தொலைபேசி அழைப்பு . . . 
சொந்த பந்தங்களின் பரிதவிப்பு . .  
 விசா இல்லையா என விசாரிப்பு . . .
எண்ணிக்கை முடிந்தாலும் 
எம் எண்ணங்கள் முடிவதில்லை . . . !

அள்ளிப் பூசிக்கொண்ட 
நறுமணம் வாசனை தூக்குகிறது . . . 
இந்த வீணாய்ப் போன 
வாழ்வின் ஏக்கம் தெரியாமல் . . . !

எமது உறக்கமோ இறக்கமோ 
பந்தமோ பாசமோ 
விற்கப்படுகிறது வெளிநாட்டுக்காரன் 
கம்பனிக்கு . . . 
மாத இறுதியில் 
இந்த காசு கொண்டு மீட்க முடியாத 
துக்கம் மட்டும் அப்படியே இருக்கிறது . . . !

எதிர் கால இலட்சியங்களை 
4 மணி நேர விமானப் பயணத்தில்
தொலைத்து விட்டு . . . 
கானல் நீர் என்று 
தெரிந்த பின்பும்
நீச்சலடிக்க நினைக்கின்றோம் . . . !

வெள்ளிக்கிழமை தான் 
நிறுத்துகிறது . . . 
இயந்திரம்போல் மாறிவிட்ட 
இந்த வெளிநாட்டு வாழ்வை 
சனிக்கிழமை வந்து விட்டால் . . .  
சனியனும் வருகிறது
எம் நிம்மதி தொலைக்க . . . !

வீட்டில் போதும் என்றளவுக்கு 
உறக்கம் கொண்ட நாட்கள் 
இந்த அலாரம் 
மணியோசை கேட்கும் போது 
அடி நெஞ்சில் 
அனலாய் கொதிக்கிறது . . .

அன்பான அம்மா 
உயிரான நண்பர்கள் 
என் ஊரின் குட்டிச்சுவர் 
என் கிரிக்கட் மைதானம் . . . 
எல்லாமே ஓர் இரவுக் 
கனவினில் வந்து 
காணாமல் போகிறது . . . 

தூண்டல் கொண்டு 
நாம் பிடித்த ஜப்பான் மீன் . . . 
கரத்தை பயணம் . . .
ஆற்றங்கரையில் உட்கார்ந்து 
ஊர் பலாய் கழுவி
தின்று தீர்த்த
5 ரூபாய் மிக்சர் . . . ! 

5 மணியானால் 
கடமைபோல் எண்ணி
நாம் தரிசித்த 
மரவெள்ளி டேஸ்ட் கடை . . .

மீன் சீசனில் 
காசில்லாமல் மீன் வங்க சென்ற 
கடற்கரை . . . 
இலங்கன்றாய் பயமரியாது 
நாம் அடித்த கடல் 
நீச்சல் . . . !

பெருவெள்ளம் எடுத்து ஊரே 
துன்பமாய் இருக்கும் போதும் 
சந்தோசமாய் 
நாம் காணச் சென்ற
தண்ணீர் அளவு . . . 
முயல் வேட்டை . . . !

நோன்பு நேரத்து கஞ்சி .. . 
மழை நேரத்து வானவில் . . . 
பெருநாளில் பலகாரம் . . . 

இவைகளை நினைத்து பார்க்கும் போதெல்லாம் 
குடும்பச்சுமை வீட்டுக்கஷ்டம் எல்லாமே வந்து . . .
எம் கண்களை நனைத்து விடுகிறது . . .

பிறந்ததில் இருந்தே 
ஒன்றாய் வளர்ந்த நண்பனின் திருமணத்தில் 
மாப்பிள்ளைக்கு டை கட்டுதல் . . . 
கூடி நின்று கிண்டலடித்து 
செமையாய் வாங்கிக் கொண்ட 
சம்பவங்கள் . . . 
கல்யான சப்ளை நேரத்து பரபரப்பு . . . 
பெண்வீட்டில் மரியாதை 
குறைவு என்று 
வீண் பிடிவாதம் . . .
பெண் கூட்டம் தூர இருந்து 
எமக்கு கொடுக்கும் ஓரப்பார்வை . . . 
நான் தான் ஹீரோ என்று 
என்னும் அந்த 
காதல் பருவம் . . . 
ஒளிந்து ஒளிந்து ஜன்னல்வலியே 
நாம் கண்ட மணமகள் மினாரா . . . !

இவையெல்லாம் கிடைக்காமல் 
சம்பிரதாய அழைப்புக்காக 
சங்கடத்தோடு . . . 
தொலைபேசி வாழ்த்தினூடே 
தொலைந்துவிடுகிறது 
எம் அயல் தேசத்தில் எம் வாழ்வு . . . !

கோடி கோடியாய் 
சம்பாதிதாலும் 
நாங்களெல்லாம் இந்த 
அயல் நாட்டு அடிமைகள் . . . 
தொலைபேசியிலும் ஈ மெயிலிலும் 
வருகின்ற 
நண்பர்களின் உறவுகளின் 
மரணச்செய்திகளுக்கு . . . 
இந்த அராபிக்கடல் மட்டுமே ஆறுதல் . . . 

உயிரைத்தாண்டி பழகியவர்களெல்லாம் . . .
ஒரு துளி கண்ணீரில் 
கரைந்து விடுகிறார்களே . . . 
இந்த பாலாய்ப்போன 
வெளிநாட்டு 
வாழ்க்கயில் . . . !

இங்கு வருவதட்காக
இழந்ததையும் 
வந்ததனால் பெற்றதையும் 
கூட்டிக் கழித்துப் 
பார்த்தால் . . . 
எஞ்சுவது 
இழப்பு மட்டும் தான் . . . !

கிள்ளாச்சொல்லி 
தொலைபேசியில் 
குழந்தை அழும் சத்தம் கேட்கிறோம் . . 
உள்ளுக்குள்ளே நாம் 
அழும் சத்தம் 
யாருக்காவது கேட்கிறதா ?

விடுமுறையில் ஊருக்கு வரும் போது
வளர்ந்து விட்ட சின்னஞ்சிறுசுகள் . . . 
மாறிப்போன கலாச்சாரம் . . . 
நெருங்கியவர்களின் மறைவு 
புதிய முகங்களின் பிறப்பு . . . 
எனது ஊரை எனக்கே 
புரிந்து கொள்ளமுடியாத சூல் நிலை . . . 
இப்படி 
எல்லா மாற்றங்களையும் கண்டு . . .

மீண்டும் வெளிநாடே வேண்டாம் 
என அடம்பிடிக்கும் மனதிடம் 
கடனும் கஷ்டமும் வந்து 
ஆறுதல் சொல்லி 
மீண்டும் அனுப்பி விடுகிறது . . . 
இந்த வெளிநாட்டுக்கு . . . 

2 comments:

  1. KAVITHAI EXPRESSES THE REAL PAINS OF NRIs .......this is "TRUE".....ARUMAIYANA KAVITHAI.

    ReplyDelete
  2. emathu manakkumuralkal nanabare . .

    ReplyDelete